Thursday, April 7, 2022

கேரள மாநிலம் கரமனை சத்தியவாகீஸ்வரர் உடனுறை கோமதியம்மாள் திருக்கோவில்

 அருள்மிகு கரமனை சத்தியவாகீஸ்வரர் உடனுறை கோமதி என்ற ஆவுடையம்மாள் திருக்கோவில்

 கோவில் நுழைவாயில்


இக்கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரில் அமைந்திருந்தாலும் கிராமப்பின்னணியில் அமைதியான சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் பேருந்து நிலையம் இரயில் நிலையத்தில் இருந்து 3கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

 கோவிலின் முன்பாக வற்றாத ஜீவநதியாக ஓடிவரும்  கரனை ஆற்றங்கரையில் கரமகரிஷி நெடுங்காலமாக தவம் செய்து வந்திருக்கிறார். ஹரன் எனப்படும் சிவன் இங்கே குடி கொண்ட மனை ஆதலால் கரமனை எனப் பெயர் வந்தாககூறப்படுகிறது. ஆதிகாலத்தில் நம்பூதிரி  பிராமணர்கள் கரமனை ஆற்றின் மறுகரையில் ஆதிகாலத்தில் வசித்து வந்ததாகவும், பெரும் பிரளயம் வந்ததால் இவ்விடத்தில் நம்பூதிரி மற்றும் பிராமணர்கள் குடியேறியதால் அக்கரைமனை எனும் பெயர் கரமனை எனப் பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

 

கரமனை ஆற்றின் ஆழமான 64 அடி உயரத்திற்கும் இக்கோவிலின் சிவன் சுயம்புவாக வீற்றிருக்கிறார். இவரையே கரமகரிஷி வழிபாடு செய்து வந்திருக்கிறார். இராமாயண காலத்தில் இருந்து இக்கோவில் வழிபாட்டில் இருந்துள்ளது.

 கரமனை ஆறு

முற்காலத்தில் சிவலிங்க வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. திருவிதாங்கூர் ராஜா தமிழ்நாட்டில் வசித்து வந்த பிராமணர்களை சிறப்பு ஆலோசனை வழங்கவும் வழிபாட்டிற்காகவும் உரிய மரியாதையுடன் அழைத்து வந்தார். அவ்விதம் தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த பிராமணர்கள் இங்கே குடியேறினர். உரிய மரியாதையுடன் அவர்களுக்கு கிராமமும் ஒதுக்கித்தரப்பட்டது. இன்றும் தமிழ்மொழி பேசும் அக்கிராகாரங்கள் உள்ளதை காண முடிகிறது. அர்ச்சகர் ஒருவரின் கனவில் சிவன் தோன்றி அம்பாளின் சிலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் உள்ளது எனவும் அதனை எடுத்து வந்து பிரதிஸ்டை செய்யவும் கூறி மறைந்தார். இத்தகவல் திருவிதாங்கூர் ராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டு தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு இதனை உறுதி செய்தனர். மீனாட்சி அம்மன் சிலை செய்யும் காலத்தே செய்யப்பட்ட இச்சிலையானது நெல்மணி அளவு மாற்றத்துடன் இருந்ததா மதுரையைில் பிரதிஸ்டைசெய்யாமல் பொற்றாமரைக் குளத்தில் தண்ணீரில் வைக்கப்பட்டது. காலங்கள் உருண்டோடிய பின் தேவபிரசன்னத்தில் இச்சிலையை வைக்க உத்தரவு பெறப்பட்டதால், மதுரையை ஆட்சி செய்த பாண்டியமன்னன் அனுமதியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கில் நடந்தே கொண்டு வந்து இக்கோவிலில் பிரதிஸ்டை செய்தனர். அம்பாளுக்கு கோமதி என்றும் ஆவுடையம்பாள் எனும் சிறப்புப் பெயரும் உண்டு. இதே பெயருடன் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிலும் உள்ளது. இக்கோவில் இரண்டும் சமகாலத்தவை எனலாம். அப்பர் பெருமானின் தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலில் தமிழ்முறைப்படியும், கேரள முறைப்படியும் வழிபாடு நடத்தப்படுகிறது. மகாதேவ சாஸ்திரிகள் தலைமை தந்திரிகளாக இருந்துள்ளார். அவரைத்தொடர்ந்து திரு. சாம்பசிவம் அவர்கள் தந்திரிகளாக இருந்துள்ளனர். தற்போது சுந்தரர் என்பவர் தந்திரியாக உள்ளார். வருடத்தின் எல்லா நாட்களிலும் வற்றாத ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் கரமனை நதிக்கு சமஸ்கிருதத்தில் வனமாலா நதி எனும் பெயர் உண்டு.

 அரசமரம் நாகர்படித்துறையில் விநாயகர்

சிறப்பு விழாக்கள்

தமிழ் ஆண்டின் தைப்பூசம் நாளன்று மூலவர் சத்யவாகீஸ்வரர் திருவீதி உலாநடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 12 நாட்களும் விழா கொண்டாடப்படுகிறது.

 

நவராத்திரி மகோத்சவம்

கரமகரிஷி காலத்தில் பத்மாநாதபுரம் கோவிலில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள சரஸ்வதி மற்றும் குமாரசுவாமியின் சிலைகள் இக்கோவிலில் வைத்துவழிபாடு செய்யப்பட்ட பின்பே எடுத்துச்செல்லப்பட்டது. ஆகவே, இந்நவராத்திரி நாட்களில் லட்சார்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு அபிசேகமும் நடைபெறுகிறது.

 

மகாதேவ அஸ்டமி , அட்சயதிருதி, பங்குனி உத்திரம், திருவாதிரை, கும்பாஸ்டமி ஆகிய நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடத்தப்படுகிறது. கந்தசஸ்டி விழா கொண்டாடப்படுகிறது. பிரதோச தினங்களில் முகமண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிசேக அலங்காரம் செய்ப்படுகிறது. இக்கோவிலில் முதலில் சத்யவாகீஸ்வரரையும் , கோமதி அம்பாளையும் வணங்கிய பின்னரே விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கும் முறையை கரமகரிஷி வைத்துள்ளார்.

 

சிறப்பம்சம்: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சத்தியவாகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கும், கரமனை சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கும் தொடர்பு உண்டு. இவை சமகாலத்திய கோயில்களாக உள்ளன. கரமனை கோமதி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அரளிப்பூ மாலை அணிவித்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் பிழைத்துக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது.

 

நவராத்திரி காலங்களில் அம்மனுக்கு நடத்தப்படும் லட்சார்ச்சனையில் பங்கேற்பதன் மூலம் அனைத்து புகழையும் பெற முடியும்.

 நெற்பறை காணிக்கை: தைப்பூசத்தன்று சத்தியவாகீஸ்வரர் மற்றும் கோமதிக்கு கரமனை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. பின் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் "நெற்பறை' எனப்படும் காணிக்கை அளிக்கின்றனர். நெல் அல்லது அரிசியை பத்து படி (15 கிலோ) அளிப்பது வழக்கம். இந்த அரிசியை வாங்க கோயிலிலேயே, செம்பால் ஆன "பறை' என்னும் பாத்திரம் வைத்துள்ளனர்.

 

இந்த அரிசி அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சுவாமிக்கு காணிக்கை செலுத்துவதன் மூலம் விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பதாக நம்பிக்கையுள்ளது.

 

நந்திக்கு வெள்ளை மாகாப்பு: கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க தைப்பூசநாளில் இங்குள்ள நந்திக்கு வெள்ளை மாகாப்பு சாத்தப்படுகிறது. வெப்ப நோய் நீங்க சுவாமிக்கு ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். லிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதில் புனித நீர் நிரப்பப்பட்டு சொட்டு சொட்டாக சுவாமி மீது விழும் வழிபாடே ஜலதாரையாகும். ஒவ்வொரு தமிழ் மாதக் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு அமைகிறது.

 

கோயில் மணி ஓசை: இந்தக் கோயிலைத் திறக்கும் போது, வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நடை திறப்பர். கணபதி, சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நாகர் சந்நிதிகளும், ஒரு தூணில் ஆஞ்சநேயரும் உள்ளனர். யானை கட்டும் இடத்தில் யானைக்கு காவலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது


கோவில் பொறுப்பாளர்கள் 

கணேஸ் பாபு 9447130230

கோவில் நிர்வாகிகள்

 

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...