இக்கோவில் கருர் மாவட்டம் திருச்சி செல்லும் சாலையில் 25 கி.மீ தொலைவில் காவிரியின் தென்கரையில் மாயனுர் எனும் ஊர் உள்ளது.
இவ்வூரின் மேற்கே 1 கிமீ காவிரிக்கரையில் வந்தால் கீழமாயனுர் எனும் ஊர் உள்ளது. இந்த ஊரில் ஆற்றங்கரையில் தான் ஒரு மிகப்பெரிய சிவன்கோவில் புதைந்திருந்தது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வரைபடத்தை எடுத்து அளந்து ஒரு மையப்புள்ளி வைத்தால் இந்த மையப்புள்ளியில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது. தமிழகத்தின் மையமாக அமைந்திருப்பதால் தான் மைய ஊர் என்பது மையனுர் பின் மாயனுர் ஆக மாறியுள்ளது. சிறப்புமிக்க இம்மாயனுரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் திரு. கார்த்திகேயன் அவர்கள் தான் இக்கோவில் வெளிப்படக் காரணமாக இருந்திருக்கிறார். அவரின் ஜாதகத்தில் பழங்கால சிவன்கோவிலை புணரமைப்பு செய்யும் வாய்ப்புள்ளதாக ஒரு மிகப்பெரும் சிவனடியார் சொல்லி வைத்திருந்திருக்கிறார்.
மனிதர்களுக்கு நேரும் கெட்ட நேரங்கள் போல சில கோவில்களுக்கும் ஏற்படுகிறது. அப்படி மண்ணுக்குள் புதைந்து போன இந்த சிவன் கோவில் புதைந்துள்ள கீழ மாயனூர் மண்மேட்டின் இடத்தை ஒவ்வொருமுறை கடந்து செல்லும் போது இவரையும் அறியாமல் ஒரு உணர்வு ஏற்படவே, ஒரு நாள் இந்த முள்காடாய் இருந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது தான் சிவனடியார் சொன்னது நினைவுக்கு வரவே நன்கு சுற்றும் முற்றும் பார்த்த போது இக்கோவிலின் கட்டிடப்பகுதிகள் மண்மேட்டிற்குள் புதைந்திருந்தது தெரியவரவே உள்ளுரில் உள்ள மக்களின் உதவியுடன் 30.05.2018 அன்று தோண்ட ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் தோண்டத்தோண்ட மிகப்பெரும் சிவன்கோவிலே புதைந்திருந்தது வெளிப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் இங்கே எப்படி இந்த நிலையில் என்று பார்ப்போம்.
பொன்னி நதி எனும் சிறப்பைப் பெற்ற காவிரி ஆறு கடலைச் சென்று சேரும் வரையிலும் தென்கரை மற்றும் வடகரையில் பழங்காலம் முதலே மக்கள் வசித்து வந்து மன்னர் ஆட்சிக் காலம் முதலே சிவாலயங்களைக்கட்டி வழிபாடு செய்துள்ளனர். இயற்கைச் சீற்றங்கள் மற்றும் படையெடுப்பு உள்ளிட்ட பாதிப்புகளையும் கடந்தே இன்று நாம் காணும் தொன்மையான கோவில்கள் நிற்கின்றன.
இம் மாயனூர் சிவன் கோவில் அமைந்துள்ள பகுதியானது காவிரி நதியின் தென் கரையில் மிகவும் தாழ்வான பகுதியில் இருந்திருக்கிறது. பெரும் வெள்ளப்பெருக்கால் புதைய ஆரம்பித்த இக்கோவில் நாளடைவில் மண்சேர்ந்து முட்செடிகள் முளைத்து மண் மூடிப் போய் இருக்க வேண்டும்.
கோவிலின் அமைப்பு :
மிகப்பெரிய அளவிலான சுற்று மதிலும், பெரிய நுழை வாயிலும், இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் ஒரு ஒழுங்கற்ற முறையில் உள்ளது. இக்கோவில் தற்போது உள்ள நிலையையும் விட கீழே 4 அடிக்கு கீழே தான் அஸ்திவாரம் உள்ளது.
கோவிலின் மேற்கு பக்கம் ஒரு கருவறை உள்ளது. இக்கருவரையில் உள்ள கட்டுமானங்களை பார்த்தால் கற்கோவிலாக கட்டப்பட்டு பின் செங்கற்கள் கொண்டு பராமரிப்பு பணிகளும் செய்துள்ளனர். இக்கோவில் பல்லவர் காலம் முதலே வழிபாட்டில் இருந்துள்ளதை இக்கருவறையின் அருகேயுள்ள வீணா தட்சிணமூர்த்தி யை வைத்தே அளவிடலாம்.
சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்ட போது கட்டுகள் போன்ற அமைப்பில் ஆவுடையும், ருத்ராட்சம் போன்ற அமைப்பில் லிங்கமும் இருந்தது சிறப்பு. இதைப் போன்று ஆவுடை அமைப்பில் சிவலிங்கம் காண்பது மிகவும் அரிதான ஒன்று.
இக்கோவிலில் கன்னி மூலையில் தோண்டி எடுக்கப்பட்ட விநாயகர் சிலையும் வாகனமும், இக்கோவில் கட்டுமானத்தில் சுவற்றில் வைக்கப்பட்ட விநாயகர், ஹனுமன், மற்றும் முருகன் சிலைகளைக் காண முடிகிறது.
இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. ருத்ராட்சேஷ்வரர்க்கு வலது பக்கத்தில் உள்ள சிவன் நீல காண்டேஸ் வரர் இவர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்டவர்.
ருத்ராட்சேஸ்வரருக்கு வலது பக்கத்தில் தென்முகமாக அகிலாண்டேஸ்வரி அம்பாள் கருவறை இருந்திருக்கிறது. இதனையும் காண முடிகிறது. கருவறை அமைந்திருந்த இடத்திலேயே அம்பாள் சிலையும் அமைத்துள்ளனர். சண்டிகேஸ்வரர், காலபைரவர் , தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களும் உள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் தற்போது திரு. கார்த்திகேயன் ஐயா அவர்களாலும் சில அடியார்கள் உதவியாலும் அமைக்கப்பட்டுள்ளது.
வெட்ட வெளியில் இருந்த சுவாமிகளுக்கு ஆஸ்பெட்டஸ் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
மறுபிறவி இல்லை எனும் பெறும் பெருமைக்குரிய தேப்பெருமா நல்லூர் சிவன் கோவிலைப் போலவே அமைப்பில் இந்த சிவன் கோவில் இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.
ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் நாட்டு பசும்பால் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. பொதுமக்களே தொட்டு அபிசேகம் செய்யும் சிறப்பு மிக்க சிவாலயம்.
இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.
வழிபாடு மற்றும் திருப்பணி செய்ய விரும்புபவர்கள் திரு. கார்த்திகேயன் அவர்களை 7010517764 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இக்கோவிலைப் பராமரித்து வரும் கார்த்திகேயன் அவர்கள் மாயனூர் கதவனையின் வட கரையில் சீதலாப் புதூர் எனும் ஊரில் காவிரி கிளை வாய்க்காலின் கரையில் உள்ள சிவாலயத்தையும் பராமரித்து வருகிறார்.