Sunday, August 21, 2022

குற்றுயிரும் கொலை உயிருமாய் சிதைந்த நிலையில் சிவன் கோவில்கள்

குற்றுயிரும் கொலை உயிருமாய்   சிதைந்த நிலையில் 2 சிவன் கோவில்களும் சிற்பங்களும் கல்வெட்டுகள் சொல்லும் கண்ணீர்க் கதை


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, பேராம்பூர் அருகேயுள்ள மலம்பட்டி  கிராமத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள  முள் காட்டிற்குள் இரண்டு சிவாலயங்கள் சிதைந்த நிலையில் உள்ளது. 






 
 முதல் கோவிலில், 11, 12ம் நூற்றாண்டு காலத்து நந்தி, மார்பு பகுதிக்கு மேல் திருமால், கத்தியுடன் நிற்கும் வீரன் ஆகிய சிற்பங்களும் உள்ளது. 






கோவில் சுவரில் உள்ள மன்னன் தேவியருடன் சேர்ந்து சிவலிங்க பூஜை செய்யும் சிற்பமும் உள்ளது. 

அதன் அருகிலேயே வடகிழக்குப் பகுதியில், முற்றிலும் அழிந்து விட்ட மற்றொரு சிவன் கோவிலும் உள்ளது. ஆவுடையாருடன் கூடிய லிங்கமும், அருகிலேயே சண்டிகேஸ்வரர் சிற்பமும், முப்பட்டை துண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளன.

















முழு விளக்கங்களும் வீடியோவில்


Youtube Video





Google Map Location
Ruined Siva Temple
JM7+R86, Pudukkottai, Tamil Nadu 622515

#Tamilkoviltrips

தோண்டி எடுக்கப்பட்ட 1200 ஆண்டு பழமையான கணவாய்ப்பட்டி சிவன் கோவில்

கணவாய்ப்பட்டி சிவன் கோவில்
கோவில் அமைவிடம் : திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் கோபால்பட்டியை அடுத்து 2 கிமீ தொலைவில் கணவாய்ப்பட்டி எனும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி சிங்கம்புணரியில் இருந்து வருபவர்கள் நத்தம் வழியே வந்தடையலாம். 

பெருவழிப்பாதை: 
நத்தம் முதல் திண்டுக்கல் செல்லும் இந்த சாலைதான் சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலம் முதல் கடற்கரைப் பொருட்களும் செட்டி நாட்டிலிருந்து வரும் பொருட்களும் கொங்குநாடு செல்லும் பெருவழிப்பாதையாக இருந்துள்ளது. பெருவழிப்பாதை என்பது தற்போது நாம் பயன்படுத்தி வரும் நான்குவழிப்பாதை போன்ற போக்குவரத்து மிகுந்த சாலையாகக் கொள்ளலாம்.

கணவாய்ப்பட்டி குளமும் சிவன்கோவிலும் 
பெருவழிப்பாதையான இச்சாலையில் கண்வாய்ப்பட்டி குளமானது இன்றளவும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள குளத்தின் கரையில் இந்த சிவன் கோவில் இருந்துள்ளது. இந்தக்குளத்தை கோவிலின் வடமேற்கில் காணமுடியும் இன்றும் இக்குளத்தில் முற்கால மனிதர்கள் தங்கள் கல்ஆயுதங்களை கூர்மையாக்க பயன்படும் கூர் தீட்டும் குழி உள்ளதை காணமுடியும். இந்தக்கல் 10 அடி உயரத்தில் இருக்கிறது. காலப்போக்கில் குளத்தின் நீர் பெருக பெருக நெடுங்கல் கனத்தால் அமிழ்ந்துள்ளது. 

இக்கோவில் தற்போது அமைந்துள்ள இடத்தின் வடக்கு பக்கமாக கற்கோவிலின் உடைந்த பகுதிகளைக் காணமுடியும். கோவிலின் கருங்கற்கள் காலப்போக்கில் சேதமடைந்தும் மக்களின் பயன்பாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். 
கி.பி. 800 ஆம் ஆண்டு முதல் கி.பி 900 வரை மதுரையை ஆட்சிசெய்த இடைக்காலப்பாண்டியர்களின் காலத்தில் இக்கோவில் வழிபாட்டில் இருந்துள்ளது. சில நூற்றாண்டுகளில் கருவறையில் வைக்கப்பட்ட மணற்பாறை லிங்கமானது தேய்மானம் ஏற்பட்டதால் 1100 முதல் 1200 ல் தற்போதை லிங்கத்தை வைத்துள்ளனர். இக்கோவில் கருவறை மட்டுமே உள்ள ஒற்றைக்கருவறை மட்டுமே உள்ளவாறு அமைத்துள்னர். இக்கோவிலின் நுழைவு வாயில் பலகைக்கல் கருங்கல் மற்றும் செம்பொறைக்கல் வகைக்கற்களைக் கொண்டும் கட்டுமானம் செய்துள்ளனர்.
கி.பி.1736 முதல் 1800 வரை இப்பகுதியில் பல்வேறுபட்ட போர்கள் நடந்துள்ளன. ஆற்காடு நவாப் முகமது அலி அவர்களுக்கும் நத்தம் மேலூர் பகுதியைக் காத்து வந்த ஆறலைக் கள்வர்களுக்கும் இரண்டு முறை போர் நடந்துள்ளது. இரண்டாவது போரில் ஆறலைக்கள்வர்கள் வெற்றி பெற்று முகமது அலி அவர்களின் விரல்கள் துண்டிக்கப்படுகிறது. இப்போர்களினால் மதுரைச் சீமையில் திவானி என்னும் நிலவரி வசூலை ஆற்காட்டு நவாப்கள் வெள்ளையர்களுக்கு வழங்கினார். 1789 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கும் விருப்பாச்சி கோபால் நாயக்கரும் மூன்று முறை போர் நடந்துள்ளது. மூன்றாவது முறைபோரில் கோபால் நாயக்கர் தோற்கிறார். இதன் நினைவாகவே கணவாய்ப்பட்டிக்கு அருகே கோபால்பட்டி என ஊரானது. இப்போர்க் காலங்களில் இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் லிங்கத்தை கோவிலில் இருந்து பாதுகாக்க எண்ணி மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். மக்கள் எண்ணியது போலவே கோவில் இடித்து தகர்க்கப்பட்டது. காலங்கள் உருண்டோடின மண்மேடாய்ப்போன இவ்விடத்தில் சீரமைப்பு பணி செய்யும் போது 1994 ஆம் ஆண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் தெரிந்துள்ளது. பின்னர் தோண்டிப்பார்த்தபோது தற்போதுள்ள சிவலிங்கம் அப்படியே சேதப்படாமல் இருந்துள்ளது. இவ்வூரைச்சேர்ந்த ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் சிவலிங்கத்தை இவ்விடத்திலேயே வைத்து வழிபடத்துவங்கினர். 1996 1998 மற்றும் 2020 ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கண்மாய்ப்பட்டிக்கும் கோபால்பட்டிக்கும் இடையே 1கி.மீ தொலைவில் மாம்பழம் கூழாக்கும் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இதன் கிழக்கே பிற்காலப் பாண்டியர்கள் கால விஷ்ணுதுர்கை சிற்பம் ஒன்றை இன்றும் மக்கள் காவல் பெண்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த இடத்தில் செங்கற்றளி ஒன்று இருந்துள்ளது. இதன் செங்கற்களை இன்றும் காண முடிகிறது. இக்குளத்தில் ஒரு கல்வெட்டும் இருப்பதாக தெரிவித்தனர். 

நத்தம் முதல் திண்டுக்கல் செல்லும் வழி வரையிலும் இதேபோல சிவாலயங்களை பார்க்கமுடியும் இதற்கடுத்து விராலிப்பட்டி எனும் ஊரின் தெற்கே மகம் நட்சத்திரத்திற்குரிய மகாலிங்கேஸ்வரர் கோவிலையும் காணமுடிகிறது.

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி



சித்தர்கள் வாழும் சிறுமலையும் சிவன் கோவில் வரலாறும்

அறிமுகம்
இந்தக் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 4 கி மீ தொலைவில் சிறுமலை பிரிவு எனும் பிரிவில் இருந்து வலது பக்கமாக செல்லவேண்டும். மலைப்பாதை மட்டுமே 20 கிமீ தொலைவு பயணிக்க வேண்டும். மலைப்பாதை ஆரம்பிக்கும் அடிவாரத்தில் திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 20 நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 வசூலிக்கப்படுகிறது. உள்ளூரில் வசிக்கும் மக்கள் தினசரி சென்று வருபவர்களுக்கு கட்டணம் கிடையாது. சோதனைச் சாவடி முடிந்ததும் மலைப்பாதை தொடங்குகிறது. மலைப்பாதை என்பதால் சற்று குறுகலானதாகவே உள்ளது. விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மலைப்பாதையில் அனுபவம் மிக்க ஓட்டுணர்களைக் கொண்டு செல்வது நல்லது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எப்போதும் ஹாரன் கொடுத்துக் கொண்டு செல்வது பாதுகாப்பானது. சிறுமலை மலைப்பாதை 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கு. 7 ஆவது கொண்டை ஓசி வளைவுக்கு மேலே செல்லச் செல்ல குளிர்ச்சியான காலநிலையை நன்கு உணர முடியும். மலைக்கு 1 மணி நேரத்தில் மேலே போய்விடலாம். சிறுமலை மேலே நிறைய தங்கும் விடுதிகள் இருக்கு. திண்டுக்கல்லில் கொடைக்கானலுக்கு அடுத்த படியாக நல்ல மலை சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் சிறுமலை உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது. 

சிறுமலையின் தொன்மை
இந்த சிறுமலையில்தான் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே மக்கள் வாழ்ந்து வந்ததை இங்குள்ள பாறை ஓவியங்களை ஆய்வு செய்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில்  இந்த சிறுமலை பற்றி ஒரு பாடல் உள்ளது. 

" வாழையும் கமுகும் தாழ்தலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"
என்ற வரிகள் மூலம் சிறுமலை சங்க காலம் முதலே சிறப்புடன் வியங்கியது தெளிவாகிறது. 


சிறுமலைக்கு மேலே அகஸ்தியர் புரத்திற்கு 15 நிமிடத்தில் போய்விடலாம். செல்லும் வழியில் நீர் வீழ்ச்சி யும் அதனைத் தொடர்ந்து 8 கை விநாயர் சிலையும் பார்க்க முடியும். சிறுமலை புதூர் எனும் பிரிவில் வலது பக்கமாக சென்றால் அடுத்த 5 நிமிடத்தில் வெள்ளிமலைக்கு போய் விடலாம். இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அடிவாரத்தில் நிறுத்த வசதியுள்ளது. 
வெள்ளிமலை அடிவாரத்தில் அகத்தியர் சிவசக்தி பீடம் உள்ளது. மலைமேல் இருக்கும் வெள்ளிமலை சிவன் என்ற அகஸ்தீ்வரர் கோவில் பார்த்து விட்டு சித்தர் பீடம் பற்றி பார்ப்போம். 

வெள்ளிமலை
அடிவாரத்தில் இருந்து மேலே 1 மணி நேரத்தில் போய் விடலாம். படிக்கட்டு அமைப்பை மலைக்கு மேலே வரைக்கும் அமைத்துள்ளனர். மேலே பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துக் கொண்டு செல்வதை தவிர்த்து விடவும், 

மலைப்பதையில் இடும்பர் கோவில் பார்க்க முடியும் , இடும்பரை தரிசனம் செய்துவிட்டு மேலே போனால் அடுத்து செல்லும் பாதை மாலை மேலே கொஞ்சம் செங்குத்தாக இருக்கும்படி அமைக்கப் பட்டிருக்கும். இந்த படி அமைப்புகளும் இல்லையென்றால் மழைக்காலங்களில் வழுக்கி விடுவதற்கும் , மண் அரிப்பு ஏற்பட்டு பாதைகள் தூர்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளது.

மலைகளில் ஏன் சிவலிங்கங்கள்?
மனிதர்கள் ஊழ்வினைகளையும், கர்மாவையும், நோய்களையும் போக்குவதற்காகவே ரிஷிகளும் மகான்களும் சிவன்லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள், சுயம்பு வாக வெளிப்பட்ட லிங்கங்களை முறைப்படி வழிபாடுகள் செய்து, நியமங்களை வகுத்தும் வைத்துள்ளனர். அதுவும் மலைமேல் இருக்கும் சிவ மூர்த்தங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆற்றல் அதிக அளவில் இருக்கும். வழக்கமாக சமனிலப் பகுதிகளில் உள்ள ஆலயங்களை விட ஆற்றல் நீர்நிலைகள் அதாவது ஆறுகளின்அருகில் உள்ள லிங்கங்கள் க்கு அதிகமாகவும், மலைமேல் உள்ள சிவங்கிங்கங்களுக்கு மிகவும் அதிகமான ஈர்ப்பு ஆற்றல் அதிகமாகவே இருக்கும். மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களுடன் பஞ்ச பூதங்களின் ஆற்றல் மலைமேல் ஒரு மையத்தில் நிலைநிறுத்தப் படுவதே இதன் தத்துவம் ஆகும். இதனால் மட்டுமே ரிஷிகளும் மகன்களும் மலையை தேர்வு செய்கின்றனர். இத்தகைய ஈர்ப்பு ஆற்றலை சிறுமலை மேல் நடந்து போகும் போதே உணர முடியும்.
அப்படியே நடந்து சென்றால் நாம பார்ப்பது வனதுர்கை அம்மன் இந்த அம்மனுக்கு முன்பாக சொந்த வீடு கட்ட மற்றும் வீடு வாங்க நினைக்கும் பக்தர்கள் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பதைப் பார்க்க முடியும். இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளை நன்றாக பார்க்க முடியும். இந்த மலைப்பகுதியி்ன் வலது பக்கத்தில் சினிமா படம் நிறைய எடுத்துள்ளனர். அடுத்து ஒரு 5 நிமிட நேரத்தில் கோவிலுக்கு போய்விடலாம். 
மேற்கு பார்த்து விநாயகரும் முருகரும் இருக்கின்றனர். விநாயகர்க்கு இரண்டு பக்கமும் நாகர்கள் உள்ளனர். 

மேற்கு பார்த்த முருகனுக்கு முன்பாக வேலும் மயிலும் உள்ளது. இரண்டு இரண்டு தூண்களையும் அதன் மேல் மணியையும் கொண்ட நுழைவாயிலை பார்க்க முடியும் கோவிலின் இரண்டு பக்கமும் சின்ன கொட்டகை போட்டு அமைத்துள்ளனர். மேலேயே மின்சார வசதி குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளனர்.
நெல்லி மரத்தின் அடியில் சிவன் ரொம்பவும் வித்தியாசமான தாக வீற்றிருக்கிறார். ஒரு மேடை அமைப்பில் வைத்து கம்பி அமைத்துள்ளனர. வடகிழக்கு மூலையில் ஒரு சிவலிங்கம்  ரொம்பவும் அழகாக வானமே கூடாராமாக, தனிமையை இனிமையாக இருக்கிறார்.  அப்படியே தெற்கே வந்தால் காவல் தெய்வமான முனியப்ப சுவாமிக்கு அரிவாள் வைத்து வழிபாட்டு வருகின்றனர். இங்குள்ள மரத்தில் மக்கள் குழந்தை வரம் வேண்டி சிறு துணியில் கற்களை தொட்டில் போல கட்டி விடுவதும், நல்ல கணவர் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என மஞ்சள் கயிறுகளை கட்டியதையும் காண முடியும்
இதன் பக்கத்தில் குடிநீருக்காக தொட்டி வைத்துள்ளனர். மலையின் அடிவாரத்தில் இருந்து விசை மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. தென்புறம் வித்தியாசமாக லிங்க் பானத்தின் மீது சிவனின் முகம் இருக்கும்படி சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கம் 500 ஆண்டுகளுக்கும் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அருகில் உள்ள அகத்தியர் வழிபடும் சிலையும் அதன் பக்கத்தில் ஒரு சுயம்பு லிங்கம் கல்லும் உள்ளது. 
இங்குள்ள தங்கும் விடுதியில் வருபவர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர். 


சிவசக்தி பீடத்தில் 24 மணி நேரமும்அன்னதானம் நடைபெறுகிறது. இங்குள்ள சிவலிங்கம் லிங்கோத்பவர் சற்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும். 
அன்னதானத்திற்கான நன்கொடை 100 ரூபாய் என்றாலும் ரசீது கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் இவான்னதானதிர்க்கன் நன்கொடை செய்ய விரும்பினால் வங்கிக் கணக்கு எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள். 


தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி!!

சிவசங்கர்
திண்டுக்கல்
9976913310
















சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...